விசாகப்பட்டினம்: சொகுசு வாழ்க்கை வாழ பூட்டிய வீடுகளில் திருடிய ஐடி ஊழியரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ரெட்டி என்கிற சன்னி (27). விசாகப்பட்டினத்தில் ஐ.டி மேற்படிப்பை முடித்த மகேஷ் ரெட்டிக்கு ஹைதராபாத்தில் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம். ஆனாலும் அது அவரின் ஆசைகளை நிறைவேற்ற உதவவில்லை. மகேஷ் ரெட்டிக்கு சிறு வயதிலிருந்தே திருடும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் அவர் தனது 15 வயதில் திருடி மாட்டிக்கொண்டார். அதன் பிறகு, அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்தார். தற்போது ஐடி துறையில் பட்ட மேற்படிப்பு படித்த பிறகு, தனது ‘கை’த்தொழிலில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்காக ஒரு பைக் வாங்கினார்.
அதில் நம்பர் பிளேட் போடாமல், முகக்கவசம், கையுறை அணிந்து இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து, பீரோவில் உள்ளதை அள்ளிச் செல்வதை வழக்கமாக்கி கொண்டார். இதற்காக கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், ட்ரில்லிங் இயந்திரம் போன்றவற்றையும் வாங்கி வைத்து உள்ளார்.
பல முறை ராமசந்திராபுரம், இந்திர பாளையம், ராஜமுந்திரி சிறைகளுக்கு சென்றுள்ளார். இது வரை அவர் 60 வீடுகளில் திருடி உள்ளார். 26 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. சமீபத்தில் 14 மாதங்கள் வரை இவர் சிறை தண்டனை அனுபவித்து உள்ளார். ஆயினும் இவர் திருடுவதை கைவிடவில்லை. ஏனெனில், இவருக்கு ஆடம்பரமாக வாழ்வது மிகவும் பிடிக்குமாம்.
அதாவது, பிஎம்டபிள்யூ சொகுசு கார், அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா, கழுத்திலும், கையிலும் தங்க செயின்கள், பிரேஸ்லெட். 4 விரல்களில் தங்க மோதிரம் அணிந்திருப்பார். இந்த வாழ்க்கை மிகவும் பிடித்து போனதால், போலீஸார் கைது செய்தாலும், மீண்டும் திருட்டு தொழிலையே செய்து, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மகேஷ் ரெட்டி.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விசாகப்பட்டினத்தில் மகேஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பிஎம்டபிள்யூ சொகுசு கார் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தவிர ரூ.15.63 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மகேஷ் ரெட்டி விசாகப்பட்டினம் மட்டுமின்றி, ஹைதராபாத், காக்கி நாடா ஆகிய பகுதிகளிலும் தனது கை வரிசையை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.