Ad 728x90

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

 "₹10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஜொலிக்கும் கருவறை" ; கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகருக்குப் பிரம்மாண்ட அலங்காரம்!

"₹10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஜொலிக்கும் கருவறை" ; கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகருக்குப் பிரம்மாண்ட அலங்காரம்!

வெள்ளிக் கவசம், கயிலாய வாத்தியங்கள் முழங்கச் சிறப்பு பூஜை: குவிந்த திரளான பக்தர்கள்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, கோவில் கருவறை முழுவதும் ₹10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட பண அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

​₹10 லட்சத்தில் மிளிரும் கருவறை அலங்காரம்:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முதல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

​விழாவையொட்டி, மூலவர் விநாயகப் பெருமானுக்குப் பளபளக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கருவறைச் சுவர்கள் மற்றும் மண்டபம் முழுவதும் ₹10, ₹20, ₹50, ₹100, ₹200 மற்றும் ₹500 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு, மொத்தம் ₹10 லட்சம் மதிப்பிலான வண்ணமயமான பண அலங்காரம் (Currency Note Decoration) செய்யப்பட்டு இருந்தது.

கயிலாய வாத்தியங்கள் & அன்னதானம்:

பக்தர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த நிதி அலங்கார தரிசனத்தைக் காண நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

​விழாவின் போது அருள்மிகு வரசித்தி விநாயகருக்குக் கயிலாய வாத்தியங்கள் அதிர முழங்க மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

 தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் கமிட்டி சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

"காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

₹10 லட்சத்தில் பண அலங்காரம், ஆசீர்வதிக்கும் யானை, டிரம்ஸ் இசை: நாளை மறுநாள் வெள்ளக்கிணற்றில் விசர்ஜனம்!

​ விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பல்வேறு வினோத வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உற்சாகமாக வழிபாடு நடைபெற்று வருகிறது.

​துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ சிலைகள்:

கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

​பல்வேறு வடிவங்களில் பிரம்மாண்ட செட்டுகள்:

ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் விதவிதமான தீம்களில் செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

​துடியலூர்: 

அடர்ந்த வனப்பகுதியில் பாயும் இயற்கை அருவியின் நடுவே விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற கமர்ஷியல் செட் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

​ஐடிஐ பகுதி: 

எல்.இ.டி திரையில் தொடர்ச்சியாக மலர்மழை பொழிய, மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா விநாயகர்' மாதிரியில் சிலை வைக்கப்பட்டு 3 வேளையும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

​நரசிம்மநாயக்கன்பாளையம்: 

பிரம்மாண்ட கோவில் வடிவில் செட் அமைக்கப்பட்டு, டிரம்ஸ் இசையுடன், வந்திருக்கும் பக்தர்களைத் தத்ரூபமாக ஆசீர்வதிக்கும் இயந்திர யானை உருவம் அமைக்கப்பட்டு இருந்தது. 

​₹10 லட்சத்தில் பண அலங்காரம்:

 நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

​என்.ஜி.ஜி.ஓ காலனி & அரவான் திடல்:

 என்.ஜி.ஜி.ஓ காலனியில் பிரம்மாண்ட கற்சிலை வடிவில் கணபதியும், அரவான் கோவில் திடலில் அழகிய மயில் வாகனத்தில் அமர்ந்து இருக்கும் பிள்ளையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

​ரங்கம்மாள் காலனி: 

நீல வண்ணத்தில் அருள்பாலிக்கும் விநாயகருடன், சிறுவர்களைக் கவரும் வகையில் ராட்சச முயல் பொம்மைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 பிரம்மாண்ட விசர்ஜனம்:

அனைத்துப் பந்தல்களிலும் அதிகாலை முதலே கணபதி ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை வேளைகளில் மேள ஜமாப், செண்ட மேளம் மற்றும் டிரம்ஸ் இசைகளுடன் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

​துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு உள்ள இந்த 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும், நாளை (செப்டம்பர் 17) காவல் துறை பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டையில் முறைப்படி விசர்ஜனம் (கரைக்க) செய்யப்பட உள்ளன.

 "மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

"மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

வழியெங்கும் மலர் தோரணம், எல்.இ.டி திரையில் மலர்மழை: 3 நாட்களும் முவேளையும் உணவு வழங்கி அசத்தல்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ஐடிஐ (ITI) பகுதியில் இந்து முன்னணி சார்பில் மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தொடர் அன்னதானம் வழங்கி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை ஐடிஐ பகுதியில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, அப்பகுதி முழுவதையும் மலர் தோரணங்களால் அலங்கரித்து, மும்பையின் உலகப் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' (Lalbaugcha Raja) விநாயகரின் மாதிரி வடிவில் 'ஐடிஐ-க்கா ராஜா' என்ற பெயரில் கம்பீரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​விநாயகர் சிலையின் பின்புறம் பிரம்மாண்ட எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு, அதில் தொடர்ந்து மலர்கள் தூவுவது போன்ற நவீன ஒளி-ஒலி அமைப்புகள் செய்யப்பட்டு இருந்தது பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தது.

 கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனையுடன் விழா தொடங்கியது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

​தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் மற்றும் காரப் பணியாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் மதிய வேளையில் 1,000-க்கும் மேற்பட்டோருக்குப் பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து 3 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் பக்தர்களுக்குத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மாலை வேளையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகர் சிலை எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா நடைபெற்றது. மேலும், விழாவை முன்னிட்டுச் சிறுவர், சிறுமிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி நிர்வாகிகள் சாச்சு, கிருஷ்ணா, தினேஷ், விகாஷ், சிபி, ஈ.பி. விஸ்வநாதன், வினித், நகுல், கிங்ஸ்லி, தர்னிஷ், கண்ணன், புனித், சுராஜ், கார்த்தி, பிரகாஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, மாலதி, ராணி, வசந்தா, அனு, ஜெயமணி, ராஜி, அமுதா, சிவசக்தி, ஸ்ரீவித்யா மற்றும் ஐடிஐ பகுதி ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

"பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

300-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை: அன்னதானம் மற்றும் எழுச்சிமிகு ஊர்வலத்துடன் கொண்டாட்டம்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் மேள தாள ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான வடிவங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​குறிப்பாகக் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமான அளவில் கலைநயமிக்க செட் அமைக்கப்பட்டு, அதில் கம்பீரமான மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​இன்று அதிகாலையிலேயே கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ராக்கிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மாலை வேளையில் நடைபெற்ற விழாவில், செண்ட மேளம், மாலை ஜமாப் மற்றும் அதிரடி டிரம்ஸ் இசை நிகழ்ச்சிகள் (Drums Performance) உற்சாகமாக நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப்பாடி விழாவைக் கொண்டாடினர்.

​அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்குச் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலமும் எழுச்சியுடன் நடைபெற்றது.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் 'படையப்பா' (எ) முத்துக்குமார், நிர்வாகிகள் தினேஷ், ஞானசேகர், அருண், நவீன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

"தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

தி.மு.க அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!

​ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை துடியலூரில் திமுக சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர்களின் அடையாளமாகவும், திராவிட இயக்கத்தின் தூணாகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினராலும் பொதுமக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்மொழி உயர்வுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 1967-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 'மதராஸ் மாநிலம்' என்பதற்குப் பெருமையுடன் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை துடியலூர் கிழக்கு பகுதி 2-வது வட்டக் கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துடியலூரில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

​மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சி.டி.சி. ராஜா, தமிழ்நிதி, குமார் (எ) சண்முகம், கழக நிர்வாகிகள் கேப்டன் பிரபாகரன், நிதியரசு, ஆறுச்சாமி, ராமசாமி, சீனிவாசன், சேகரன், வாசு, டி.எஸ். ராமசாமி, டி.என்.சி. பழனிச்சாமி, டி.ஆர். ராஜேந்திரன், ரவி, அயூப்கான், பீடா கடை ராஜன், ஜீவரத்தினம், சிவநந்தினி, தனபாக்கியம், கோமதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு அண்ணாவின் புகழுக்கு அஞ்சலி செலுத்தினர்.

"சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்" ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிவசேனா!

"சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்" ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிவசேனா!

5 நாட்கள் இயல், இசை, நாடகம், பட்டிமன்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

​ நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா பக்திச் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் மா.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் சார்பில் சுமார் 11 அடி உயரமுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலை கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் உள்ளிட்ட அனைத்து வேதகாலப் பூஜைகளும் முறைப்படி நடைபெற்றன.

விழா குறித்து சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

​"சிவசேனா அமைப்பின் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடர்ந்து 5 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழா நாட்களில் இயல், இசை, நாடகம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கலைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து போட்டிகளில் பங்கேற்பதோடு, விநாயகப் பெருமானின் அருள் பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வும் இன்பமும் பெற வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "நம்நாட்டில் மனிதர்கள் இடையே சாதி, மத, இன பேதம் எதுவும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நோக்கமாகும்," என்று சமூக நல்லிணக்கச் செய்தியைத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் சிவசேனா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

2 டன் மலர்களால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம்; அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலையான கோவை புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் பிரம்மாண்ட காப்பு சாத்தப்பட்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையைக் கொண்ட ஆன்மீகத் தலமாகத் திகழ்கிறது. ஒரே பாறைக் கல்லால் செதுக்கப்பட்ட இந்த மூலவர் சிலை, சுமார் 19 அடி உயரமும், 10 அடி அகலமும், 190 டன் எடையும் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முந்தி விநாயகருக்குத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுமார் 50 கிலோ தூய சந்தனத்தைக் கொண்டு விநாயகர் விக்கிரகம் முழுவதற்கும் 'சந்தனக் காப்பு' சாத்தப்பட்டு திவ்விய ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

​மேலும், மல்லிகை, முல்லை, செவ்வந்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட சுமார் 2 டன் எடை உள்ள வண்ணமயமான மலர்களைக் கொண்டு திருக்கோயில் வளாகமும் விநாயகர் பேரொளியும் கண்கொள்ளாக் காட்சியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே லட்சக் கணக்கான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். 

பக்தர்கள் அனைவரும் "ஓம் கணபதி" என்ற பக்தி கோஷத்துடன் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அருள்மிகு முந்தி விநாயகரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

​பக்தர்கள் சிரமமின்றி விரைவாகத் தரிசனம் செய்து செல்ல ஏதுவாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரத்யேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு விசேஷ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.